
சொல்லாத காதல்…





இணையவும் முடியாமல்…
பிரியவும் முடியாமல்…
இருவர் சேர்ந்தும்…
சேராமல் செல்லும் அதிசய பயணம்!
நிலவைக் கொண்டு விளக்கு செய்து…
மேகத்திலிருந்து பஞ்சு திரித்து…
நட்சத்திரங்களை கொண்டு தீபம் ஏற்றி…
கண்டேன் இரவின் அழகை!

உன் மொழியை அறிய முற்பட்டேன்…
உன்னை தேடி வரும் வண்டோடு நீ செய்யும் சம்பாஷனைகளின் அழகை கண்டேன்…
புரிந்து கொண்டேன்…
உன் மொழிக்கு,
வார்த்தை இல்லை!
சத்தம் இல்லை!
ஆனாலும் இனிமைக்கு அதில் பஞ்சமும் இல்லை!

எத்தனை முறை பிரிந்தாலும்…
மீண்டும் மீண்டும் கரையோடு சேர துடிக்கும்…
கடலின் விடாமுயற்சி!

எரியும் சூரியனின் தீயும் தேனாய் மாறும் நீ வரும் நேரத்தில்!
கரு வானத்தில் புள்ளி வைத்து கோலமிட்டன நட்சத்திரங்கள்!
விளக்கேற்றி ஆனந்தத்தில் ஆரவாரம் செய்தன மின்மினி பூச்சிகள்!
உன் வருகையை தம்பட்டம் அடித்தது ஆந்தையின் அலறல்!
மயில் தோகை போன்ற மாலை தென்றல் உன்னை வரவேற்க உற்சாகமாக காத்துக் கொண்டு இருக்கிறது!

காற்றில் இணைந்த இசை!
மண்ணோடு மறைந்த மழை!
நாவோடு சேர்ந்த சுவை!
இரவோடு இணைந்த இருள்!
முகிலோடு கலந்த காற்று!
வானவில்லோடு பிணைந்த வண்ணம்!
உயிரில் கரைந்த மூச்சு காற்று!
அறிமுகமான அதே நொடியில் அந்நியனாய் பிரிந்து சென்றாய்…
இணைந்த தருணத்தில் இணையா வரத்தை கொடுத்து சென்றாய்…
தொடர்பில்லாத தோழன்!
எதிர்ப்பில்லாத எதிரி!
உறவாடாத உறவு!